Saturday, December 16, 2017

பழவேற்காடு - Pulicat

பழவேற்காடு ஏரி என்று தமிழில் அழைக்கப்படும் புலிகாட் ஏரி, இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர்நிலையாக உள்ளது. இந்தியாவின் இரண்டு மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்திருக்கும் இந்த ஏரி தென்னிந்தியாவின் பகுதிகளிலிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் கவரும் இடமாக இருக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா என்ற இடைப்பட்ட சிறு தீவுப்பகுதியால் இந்த ஏரி பிரிக்கப்பட்டிருக்கிறது.

விலங்குகள் மற்றும் பறவைகளால் நிரம்பியிருக்கும் பழவேற்காடு ஏரியானது, மீன்கள் விற்கும் வர்த்தக மையமாகவும் உள்ளது. இந்த ஏரிக்கு ஆரணி ஆறு, கலங்கி ஆறு மற்றும் சுவர்ணமுகி ஆறு ஆகியவற்றிலிருந்து நீராதாரம் கிடைக்கிறது.
























டச்சுக் கல்லறைகள்

ஆங்கிலேயர்கள் வருவதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே போர்த்துகீசியர்கள் சோழமண்டலக் கரையோரத்தில் குடியேறிவிட்டனர். அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள பழவேற்காட்டை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டனர். அப்போது சென்னை என்ற பகுதி வெறும் பொட்டல் மணல்வெளியாக  இருந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை. அதையும் தாண்டி சாந்தோமில் கால்பதித்தது தனிக்கதை. அவர்களைத் தொடர்ந்து 1607இல் டச்சுக்காரர்களும் வந்துவிட்டனர்.

வணிகத்திற்காக வந்த டச்சுக்காரர்கள் பின்னர் பாதுகாப்பு கருதி பழவேற்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டினர். இன்று கோட்டைக்கான எந்த சுவடும் அந்த பகுதியில் இல்லை. ஆனால் அங்கு ஒரு பலமான கோட்டை இருந்தது என்பதற்கு ஆதாரமாய் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது ஒரு கல்லறை. ஒருகாலத்தில் கோட்டை இருந்த பகுதிக்கு எதிரில் அமைந்திருக்கிறது இந்த கல்லறைத் தோட்டம்.

புதிய கல்லறைத் தோட்டம் (New Cemetery) என்று அழைக்கப்படும் இந்த பகுதி தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ''பாதுகாக்கப்பட்ட பகுதி" என்பது பெயரளவில் மட்டுமே!



 இரண்டு எலும்புக் கூடுகள் வரவேற்கும் வாசல் வழியாக சென்றால் நம் கண்முன் விரிகிறது 17ஆம் நூற்றாண்டு. குதிரைகள் புடைசூழ ஒய்யாரமாக வலம் வந்த தளபதிகள் முதல் சமையல் அறைகளில் இருந்தபடியே சரித்திரத்தின் பக்கங்களில் ஆதிக்கம் செலுத்திய பெண்மணிகள் வரை அனைவரும் இங்கு அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கல்லறைத் தோட்டத்தில் மொத்தம் 77 சமாதிகள் இருக்கின்றன. 1656 ஆம் ஆண்டுக்கு பிறகு இறந்த முக்கியப் பிரமுகர்களின் உடல்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 1606 முதல் 1656 வரை உயிரிழந்தவர்களின் உடல்கள் சற்று தொலைவில் உள்ள பழைய கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளன. ஆனால் பழைய கல்லறை இன்று மிகவும் சிதலமடைந்துவிட்டது.


புதிய கல்லறையில் இருக்கும் ஒவ்வொரு சமாதியும் பல வரலாற்றுத் தகவல்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த நினைவுக் கற்களின் மீதுள்ள எழுத்துகள் டச்சு மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை ஹாலந்து நாட்டிலேயே எழுதப்பட்டு கப்பலில் எடுத்துவரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்குள்ள 77 சமாதிகளில் பெரும்பாலானவை டச்சுக்காரர்களுடையவை. இவற்றில் 5 சமாதிகளின் மீது சிறிய மாடம் போன்ற அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மூன்று சமாதிகள், வேலைப்பாடுகள் நிறைந்த வளைவுகளுடன் காட்சியளிக்கின்றன. மீதமுள்ள இரண்டு சமாதிகள் சதுர ஸ்தூபிகளாக (Obelisk) உயர்ந்து நிற்கின்றன. இவற்றில் உயரமாக இருக்கும் ஸ்தூபிக்கு பின் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது.


இங்குள்ள அனைத்து சமாதிகளின் மீதும் டச்சு மொழியில் நிறைய எழுதப்பட்டுள்ளன. இவை அந்த மனிதரைப் பற்றியும், அவரது வாழ்க்கை சார்ந்த நிறைய தகவல்களையும் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு, இங்குள்ள 20 கல்லறைகளின் தகவல்கள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் 11 கல்லறைகள் பெண்களுடையவை, 9 ஆண்களுடையவை. இறந்தவர்களில் பெண்களின் சராசரி வயது 30ஆகவும், ஆண்களின் சராசரி வயது 48ஆகவும் இருக்கிறது.

இந்த சமாதிக் கற்களின் மூலம்தான் இங்கு ஜெல்டிரியா என்ற கோட்டை இருந்த விவரம் உறுதிப்படுத்தப்படுகிறது. அந்த கோட்டை எப்படி இருந்தது என்ற வரைபடம் கூட ஒரு சமாதியில் இடம்பெற்றிருக்கிறது. மற்றொரு நினைவிடத்தில் பழவேற்காடு 17ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது என காலத்திற்கும் அழியாத வகையில் கல்லில் பொறித்திருக்கிறார்கள். டச்சுக்காரர்கள் வரைபடம் வரைவதில் சிறந்தவர்கள் என்பதை இந்தக் கற்கள் உறுதிப்படுத்துகின்றன.


நினைவுக் கற்களின் ஓரங்களை அலங்கரிக்கும் விதவிதமான பூ வேலைப்பாடுகள், மத்தியில் காட்சியளிக்கும் பிரதான சித்திரங்கள், அவற்றின் அழகியல் என ஒவ்வொரு கல்லும் சிற்பக் காவியமாகவே காட்சியளிக்கின்றன. இவற்றை ரசித்தபடியே, ஆளரவமற்ற இந்த மயான பூமியில் அமைதியாக கண்களை மூடி நிற்கும்போது வாழ்வின் நிலையாமை அழுத்தமாக முகத்தில் அறைகிறது.

டச்சு கல்லறைத் தோட்டத்தில் அனைத்தையும் விட உயர்ந்து நிற்கும் ஒரு சதுர ஸ்தூபிக்கும் ஜப்பானுக்கும் தொடர்பு இருக்கிறது. கப்பலில் இருந்து ஓடிவந்த ஹிக்கின்போதம் (MynHeer Von Higginbottom) என்ற வணிகர் பழவேற்காட்டில் தஞ்சமடைந்தார். பின்னாட்களில் சிறந்த வணிகராக பெயரெடுத்த அவர், இங்கிருந்தபடியே சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்தார். வணிகத்தோடு நிறுத்தாமல் அவர் காதலும் செய்தார்.


ஜப்பானின் அரச கருவூலத்தை கவனிக்கும் உயரதிகாரியின் மகளை இந்த வணிகர் காதலித்தார். அவரையே கரம்பிடித்து பழவேற்காட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். இப்படி சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருநாள் புயல் வீசியது. கடலில் சிறிய படகில் சென்று கொண்டிருந்த அவரது 18 வயது மகன் அலையின் சீற்றத்திற்கு இரையாகிவிட்டான். தங்கள் அருமை மகனைப் புதைத்து, அதன் மேல் அந்த காதல் தம்பதி எழுப்பிய ஸ்தூபி, இன்றும் அவர்களின் ஆறாத சோகத்தை சொல்லிக் கொண்டே இருக்கிறது.

~ நன்றி தினத்தந்தி (செய்திக் குறிப்புகளுக்காக)

No comments:

Post a Comment