Friday, August 26, 2016

பள்ளிக்கரணைத் தாமரைக்குளம் - Pallikaranai Lotus Pond

பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், அதுவும் போக்குக்குவரத்து நெரிசலுள்ள சாலைக்கருகில் பள்ளிக்கரணை தாமரைக்குளம். மாநகராட்சியால் நன்காகவே பராமரிக்கப்பட்டு வருகிறது.

வண்ண வண்ண மலர்கள், நல்ல இருக்கைகள், குழந்தைகள் விளையாட வசதி, பக்கச் சுவர்களில் ஓவியங்கள் ... குளத்தில் தாமரைகளும், வாத்துகளும் .... மனதிற்கினிய ஓர் சிறிய பூங்கா!



























இதை விட மிக முக்கியமான, அரிதான நன்னீர் சதுப்பு நிலக்காட்டினை (பள்ளிக்கரணை) பாதுகாக்காமல் குப்பை மலையாய் வீணடித்து வருவது வருந்தத்தக்கது.

Saturday, August 20, 2016

கம்பம் முதல் இடுக்கி வரை - Cumbam To Idukki

"வேலூர் மாவட்டம்" திரைப்படத்தில் - பாய் வீட்டு கல்யாணத்துக்கு பரபரப்பா கிளம்பும் சிங்கமுத்து போல .... நாங்களும் நண்பர் (பாய்) ஒருவரின் திருமணத்திற்காக அவரது திருமணப் பத்திரிக்கையை வழுக்கட்டாயமாக அவரிடமே வழிப்பறிச் செய்து (தங்குவதற்கு, போக்குவரத்து ஏற்பாடு வேறு) படுக்கும் வசதிக் கொண்ட பேருந்தில் ... கம்பம் நோக்கி கிளம்பினோம்.

இரவு 9:00 மணிக்கு கிளம்பி அடுத்த நாள் காலை மிகத்தாமதமாகவே கம்பம் அடைந்தோம்.

வழியில் "தேனி" நகரம்

மலைகளை அரணாய், தென்னையும், வாழையும் ... எங்கும் பசுமையாய்!




காற்றாலைகள் ஆங்காங்கே


குடும்ப நிகழ்ச்சிகளுக்கான விளம்பர பேனர்களில் பெரும்பாலும் "பென்னிகுயிக்" புகைப்படம். தேனி உள்பட 4-5 மாவட்டங்களின் உயிர் நாடி "முல்லைபெரியாறு அணை"க் கட்டியவர் ஆயிற்றே. இங்குள்ள மக்கள் தலைமுறைத் தலைமுறையாய் அவரை நினைவுக் கூர்ந்தே வாழ்கிறார்கள்.

 

தோராயமாக காலை 8:30 மணிக்கு கம்பம் அடைந்தோம். (பேருந்து பயணத்தைப் பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம் அவ்வளவு விடயம் இருக்கிறது!!!)

பேருந்து நிலையத்திலிருந்து எங்களது விடுதியை அடைந்தோம். நாங்களெல்லாம் மணமகன் வழியல்லவா ... மணமகள் வீட்டாரின் விருந்தோமல் மிகச்சிறப்பாய்.

நல்ல விடுதி ... நேர்த்தியான படுக்கை அறை, தூய்மையான வளாகம், குளிர்ச்சியான நீச்சல் குளம் ... (மனதிற்குள் வடிவேலுவின் குரல் .... அய்யோ Swimming Pool, Bed உஉஉ, LED (HD Box உஉஉ) டிவி, டூத் பிரஷ், பேஸ்ட் ... சோப்பு, ஷாம்பூ .... உஉஉ)





குளியலை முடித்து விட்டுக் காலைச் சிற்றுண்டியாய் சுடச்சுட பூரியும், தோசையும், தேநீரோடு முடித்தோம்.

மேகமலை, தேக்கடி என பலக் குழப்பங்களில் “இடுக்கி” செல்ல ஆயத்தமானோம்.

"Enjoy" யாக தொடங்கிய Van பழுதுபடவே, மீண்டும் "Bolero" வில் ... (பேருந்து மற்றும் Van களால் பயணத்தில் 2-3 மணி நேர தாமதம்)


மலைகளில் பயணிக்க ஆரம்பித்ததுமே .... வழியெங்கும் அருவிகள் ... வண்ண வண்ண மலர்கள் ... பலா ...






வழியில் அவ்வப்பொழுது சுடான எழுமிச்சைத் தேநீர், உப்பு மற்றும் மிளகாயில் ஊற வைத்த நெல்லிக்காய், கொழுக்கட்டை ... என உணவுச் சுற்றுலாவாக!

மதிய உணவு வேளையில் செறுதோணி (Cheruthony) ஊரை அடைந்தோம். அப்படியே உணவை முடித்து விட்டு செல்ல அனைவரும் இசைந்ததால் ஒரு சிறியச் சிறப்பான உணவு விடுதியொன்றில் .... அசைவ நண்பர்கள் கேரளச் சுடுச்சோறும், மீன் பொரியல், வறுவல் என கலவரப்படுத்த, தாவிர பிராணியாகிய எமக்கு பரோட்டாவும், பட்டானிக் குழம்பும்.

ஒருவழியாக அனைவரும் உண்டு "இடுக்கி" அணையை அடைந்தோம். கேரளாவின் மின் தேவைகளை பூர்த்தி செய்வதில் "இடுக்கி" அணை முக்கிய பங்கு வகிப்பதால் புகைப்படக் கருவி மற்றும் கைபேசிகளுக்கான தடை ...



"இடுக்கி" அணை

இடுக்கி அணை 839 அடி உயரமுடைய குறவன் மலை, 925 அடி உயரமுள்ள குறத்தி மலை எனும் இரு மலைகளை இணைத்து வளைவு வடிவில் கட்டப்பட்ட அணையாகும். ஆசியாவிலிருக்கும் உயரமான வளைவு அணைகளுள் (Arch Dam) இது இரண்டாவது மிகப்பெரிய அணையாகும். இதன் உயரம் 167.68 மீட்டர்கள். இந்த அணை 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 72 டிஎம்சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் வசதியுடையது.

குறத்தி மலையில் சிறிய குகை ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது. குறவன் மலையிலும் ஒரு குகை வெட்டப்பட்டுள்ளது. ஆனால் இது பயன்பாட்டில் இல்லை. குறவன் மலையின் மறுபுறம் செறுதோணி அணை உள்ளது. இவை இரண்டும் தடுப்பதால் உருவாகும் நீர்த்தேக்கம் இடுக்கி நீர்த்தேக்கம் எனப்படுகிறது.

இந்த முனையிலிருந்து ... அந்த முனை வரை தோராயமாக 3 கிமீ தூரம். சாரல் மழை பொழிகையில் நடக்கலானோம். பெரிய, பெரிய பாறைகளும், மலைகளும் … இயற்கை பஞ்சுக் கூடு போல எப்பொழுதும் நீரைக் கசிந்துக் கொண்டே ... அவ்வளவுச் சுவை.



நண்பர்களோடு, சாரல் மழையில், உயரமான அணையில்/மலையில் நடப்பதைவிட சிறந்த தருணம் இப்பயணத்தில் இருக்குமா எனத்தெரியவில்லை.

வைஷாலி குகையும், Hills View Park (இடுக்கி) எங்களால் பார்க்க இயலாமல் போனதில் சிறு வருத்தமே.

அணை உலா முடிந்து ... கலவேரி (Calaveri) மலைக்கு பயணித்தோம்.

கலவேரி (Calaveri) மலை

எங்கெங்கும் காணப்படும் "சிலுவைகள்" ... விபரங்கள் நமக்கு தெரியவில்லை. இடுக்கி அணையின் நீர்த்தேக்கம் மிக அழகிய ஓவியம் போல ... சட்டென்று பனி சூழ ... நாம் கண்ட ஓவியத்தை புகைப்படக் கருவியில் முழுமையாக சிறைப்படுத்த இயலவில்லை.







ஏதோ ஒரு தெலுங்கு படபிடிப்பு, பாடல் காட்சி போல, அதே இரண்டு வரிகள் இரண்டு மணி நேரமாக மலைகளில் எதிரொலித்துக் கொண்டு.... எங்கும் பனிச்சூழ ... சூரியன் கூட சந்திரன் போல ...

நீலக்குறிஞ்சி மலர் காண சிறிய நடை முடித்து பனியும், இருளும் சூழ மீண்டும் கம்பம் நோக்கி ... பயணித்தோம்.

நண்பரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துக்கொண்டு இரவு உணவை முடித்து ... அப்படியே ஆழ்ந்த தூக்கம்!

சூடான தேநீரோடு காலை புலர்ந்தது. நீச்சல் குளத்தில் சில மணி நேரங்கள் குளிர்ந்த நீரில் இன்புற்று, காலை உணவை முடித்து ... சிறிது நேர ஓய்வுக்குப்பின் நண்பரின் திருமணத்திற்கு கிளம்பினோம்.

ஒரு அரசியல் தலைவரும் திருமணத்திற்கு வந்துள்ளதால் மிக விமரிசையாக திருமண ஏற்பாடுகள். திருமணம் முடிந்து நண்பரை வாழ்த்தி விட்டு .... மதிய உணவு....

சைவம், அசைவம் என 6 வெவ்வெறு உணவுக்கூடங்கள் ... வகை, வகையான, சுவையான உணவு ... பயணத்தின் நோக்கம் நிறைவேறியது!!!

உண்ட களைப்புடன் அப்படியே சுருளி அருவி நோக்கி …


 
 

சுருளி அருவி

இந்த மலைக்குகைகளில் தேவர்களும், ரிஷிகளும் தங்கியிருந்ததாகக் கருதப்படும் கயிலாய மலைக் குகை இருப்பதால் இங்கு புண்ணியாதானம் செய்யப்படும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் சுருளி நீர் வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது.

வழியில் திண்பண்ட கடைகள் ... அதை நம்மிடமிருந்து களவாட குரங்கு பட்டாளங்கள்.



 




புரியாத பல/பழ மரங்களோடு, புளி, மா மரங்கள் ... 




நீர்காகம்


 
 தட்டான்


 வண்ண மலர்கள்






அருவியில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என தனித்தனியே குளிப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 1000 முறை ஷவரில் குளித்தாலும் ஒரு முறை அருவிக்குளியலுக்கு ஈடு ஆகா .... ஆனந்த குளியல் அருவியில் அலுப்புத்தீர!



குளித்து, களைத்து இளநீரும் தின்பண்டங்களும் உண்டு கம்பம் நோக்கி மீண்டும் ... பயணித்தோம்.

கோடிலிங்கம் கோயில்

சுருளி நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுருளி மலைச் சாரலில் உள்ளது கோடிலிங்கம் லிங்கபர்வதவர்த்தினி கோயில். தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் நிறுவப்பட்டுள்ள இந்தக் கோயிலில் கோடி லிங்கம் வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஆயிரம் லிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கோடிலிங்கம் கோயிலும் நம்மால் பார்க்க இயலாமல் போயிற்று!

கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான சுருளி மலைச்சாரல் பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் திராட்சைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டு திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நாமும் கொஞ்சம் திராட்சை வாங்கிக்கொண்டோம்.



 
அருவிக்குளியல் முடித்த மாலை வேளையில் இளையராஜாவோடு தேநீர் ...



இரவு உணவையும் கம்பமில் உண்டு சென்னை நோக்கி ... பேருந்தில்!

இடுக்கி அணை, முல்லை பெரியாறு அணை, தேக்கடி, வைகை அணை குறித்து ஒரு புரிதலுக்காக.

(குறிப்பு: தகவல்களும், சில புகைப்படங்களும் இணையத்தில் இருந்து உபயோகிக்கப்பட்டவை.)


அணைகளின் அளவுகள் (விக்கிபீடியா போன்ற தளங்களில் இருந்து)

Details
Vaigai Dam
Mullai Periyar Dam
Idikki Dam
From Sea Level
100 m - 262 m
(328 ft - 859.58 ft)
881 m
(2890 ft)
450 - 748 m
(1476.38 ft - 2454.07 ft)
Height
33.8 m (111 ft)
53.66 m (176 ft)
168.91 m (554 ft)
Length
3560 m (11,680 ft)
365.85 m (1200 ft)
365.85 m (1200 ft)
Max Water Depth
21.64 m (71 ft)
43.28 m (142 ft)

Total Capacity

12.75 TMC (for 142 ft)
15.6 TMC (for 152 ft)
70.48 TMC
Active Capacity

7.6 TMC (for 142 ft)
10.5 TMC (for 152 ft)
51.52 TMC

Note: 21 November 2014, Mullai Periyar water level touches 142 feet for first time in 35 years

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழகம் நோக்கி

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் உயருகையில் தேக்கடி முதல் குகைவழித்தடமாக வைரவனாறு வரை வரும் நீர் வீரபாண்டியாறு, முல்லைப்பெரியாறு, வைகையாறு வழியாக வைகை அணையை அடைகிறது. முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் ஆதாரம்.







முல்லை பெரியாறு அணை கேரளத்தினுள்
 

பெரியாறு (முல்லை) வழியாக இடுக்கி நீர் தேக்கம்.

ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் தோராயமாக 5-6 TMC நீர் வேகமாக இடுக்கி நோக்கியே பாயும் ... புவியியல்!

முல்லை பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை? அதன் அமைவிடம்? அதனால் வைரவனாறு நீர் பெறுமா? இல்லை இடுக்கி நீர் பெறுமா? என்பது அரசியல்!

முல்லை பெரியாறு அணையை வழுப்படுத்தலாம் ஒருவேளை அது உண்மையாகவே வலுவிழந்திருந்தால், அதற்காக புதிய அணை அவசியமா?


 புவியியிலும், அரசியலும்.... முல்லைப்பெரியாறு அணையைக் காக்கட்டும்!