Saturday, December 3, 2016

ஏற்காடு - Yercaud

உறவினர் வீட்டுத் திருமண விழாவிற்காக சென்னையிலிருந்து சேலத்திற்கு கோவை எஃக்ஸ்பிரஸ்ஸில் பயணத்தை தொடங்கினோம். சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் சேலம் சந்திப்பை அடைந்தோம்.

காலை உணவை சேலம் சந்திப்பில் உள்ள உணவகத்தில் முடித்து விட்டு மகிழ்வுந்தில்  ஏற்காடு நோக்கி ... (இரயிலிலே சிற்றுண்டி மற்றும் தின்பண்டங்கள் தொடர்ந்து கிடைப்பதால் பசியோடு பயணிக்க அவசியமில்லை)

ஏற்காடு ஒரு முன்னோட்டம்

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சேர்வராயன் மலையில் அமைந்துள்ள "ஏற்காடு" கடல் மட்டத்திலிருந்து 5326 அடி (1623மீட்டர்) உயரத்தில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைப்பார்கள். ஏரிக் காடு என்பதே ஏற்காடு என்று மருவி விட்டது. இது சேலத்திலிருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 22 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.






சென்னையில் "நாடா" புயலினால் பாதிப்பில்லை என்றாலும் மழை அவ்வப்பொழுது பெய்துக் கொண்டிருந்தது. இங்கு பருவநிலை சற்று நன்றாகவே இருந்தது. குளிர்ந்த காற்றும் மிதமான வெயிலும் .. பயணத்தை இதமாக்கி ... இயற்கையை ரசிக்க ஏதுவாய் அமைந்தது.

நகரின் மையத்திலே ஏரியும், பூங்காக்களும் அருகருகே இருப்பதும், இங்கு அதிகமாக பயணிக்கவோ ... பார்வையிட அதிக இடங்களோ இல்லாததும்  .. ஏற்காட்டின் சூழலை ஒவ்வொரு இடத்திலும் மிக பொறுமையாகப்  பனிப்பொழுதில் சூடான தேநீரைப் போல ரசித்து பருகலாம்.

ஏற்காடு ஏரி

தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஏற்காடு ஏரியும் ஒன்றாகும்.





ஏரியில் ஓர் படகு உலா ... ஏரியின் நடுவில் தீவைப்போல் "மான் பூங்கா"





சிறுவர்களைக் கவர விளையாட்டு சாதனங்களோடு, விலங்குகள் சிற்பங்கள் ஆங்காங்கே.








பொதுவாக ஆங்கிலத் திரைப்படங்களில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எலி மற்றும் முயலின் கலவையாகத் தோண்றும் "கூமாத்தி", மான், மயில், வாத்து மற்றும் இன்ன பிற உயிரினங்கள்.











சேர்வராயன் கோவில்

சேர்வராயன் மலை உச்சியில் ஒரு மெல்லிய குகையில் அமைந்துள்ளது. சிறியக் குகைக்கோவில் .. உள்ளே வழிபட செல்கையில் கற்தரை ... பனித்தரைப் போல அவ்வளவு குளிர்ந்து .... இக்கோவிலில் தேவி காவேரிக்கும், சேர்வராயன் கடவுளுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.



முடவன் ஆட்டுக்கால் கிழங்கு

ஆண் மற்றும் பெண்களுக்கு நடுத்தர வயதில் தோன்றும் பலவிதமான உடல் மற்றும் மூட்டுவலிகளை நீக்கி, முழங்காலுக்கு வலுவை கொடுக்கும் மூலிகை தான் "முடவன் ஆட்டுக்கால் கிழங்கு". கொல்லிமலை மற்றும் இங்கு பரவலாகக் கிடைக்கின்றன.

இக்கிழங்கை பொதுவாக "சூப்" வைத்து பருகுகின்றனர். இக்கிழங்கு "சூப்"பின் சுவை ஆட்டுக்கால் சூப்பின் சுவையைப் போலவே உள்ளது.



அதிகமா விளையும் "கொய்யா", சவ்சவ் (பெங்களூரு கத்தரிக்காய்)



மாலை மலர்கையில் ஓய்வெடுக்க இயற்கைச் சூழலில் ஊருக்கு வெளியே ஓர் விடுதியில். இரம்மியமான சூழல், சூடான மற்றும் சுவையான உணவுகள் ...


அடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை)

லேடி சீட்

ஏற்காட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து தொலைநோக்கி மூலம் மலைகள், மலையின மக்களின் கிராமங்களைக் கண்டு ரசிக்கலாம்.



ரோஜாத் தோட்டம்

இப்பூங்காவில் அதிக நேரம் செலவழித்து விட்டு சேலம் சென்றோம்.




  








மாலை மற்றும் திங்கட் கிழமைக் காலைத் திருமண விழாவில் கலந்துக்கொண்டோம்.

ரூபாய் பிரச்சனையில் ATM வாசல்களில் மக்களின் நீண்ட வரிசை ... சேலமெங்கும்!!!

மீண்டும் சென்னை நோக்கி பேருந்தில் பயணம். வரும் வழியில் முதல்வரின் உடல்நிலைக்குறித்த தகவல்களால் கலக்கமுற்றது தனிக்கதை ....